தருமபுரி மாவட்டத்தில், தற்போது பயிரிடப்பட்டுள்ள சிறிய வெங்காயத்தில் அழுகல் நோய்த் தாக்குதல் தெரிகிறது. இது ப்யூசேரியம் ஆக்சிஸ்போரம் எனும் பூஞ்சை மூலமாக ஏற்படுகிறது. நோய்த் தாக்கிய விதைக் காய்களை நேர்த்தி செய்யாமல் நடுவதால், இந்நோய் அதிகளவு ஏற்படும்.
நிலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் இந்த பூஞ்சையின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, வெங்காய வயலுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
அதாவது, நிலம் நன்கு காய்ந்த பிறகு நீர்ப் பாய்ச்ச வேண்டும். ஈரத்தன்மை இருக்கும் போது, நீர்ப் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும். களிமண் பாங்கான நிலங்களில் 7 முதல் 9 நாள்களுக்கு ஒரு முறையும், மணல் பாங்கான நிலங்களில் 5 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சினால் போதுமானது.
அழுகல் நோய்த் தாக்கிய வெங்காயத் தாள்கள் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். நோய் முற்றிய நிலையில் தாள்கள் நேராக இல்லாமல், துவண்டு போய் காணப்படும்.
செடியைப் பிடுங்கிப் பார்த்தால், காயின் வேர் தோன்றும் பாகம் அழுகி நைந்து போனது போல தோன்றும். இந்நோய் தோன்றிய செடிகளை உடனடியாக பிடுங்கி அழித்துவிட வேண்டும். இல்லையெனில், மற்ற செடிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.
அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்:
10 லிட்டர் நீருக்கு கார்பென்டாசிம் பூஞ்சாணக் கொல்லி 10 கிராம் மற்றும் ஸ்டிரெப்டோமைசீன் சல்பேட் 2 கிராம், ஒட்டும் திரவம் 5 மில்லி என்ற வீதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் வயலில் தெளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வெங்காயத்தில் ஏற்படும் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.