Sunday, August 8, 2010

உர மேலாண்மையை கடைப்பிடிப்பது எப்படி?


உலகில் உரம் பயன்படுத்துவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மத்திய அரசின் செலவீனத்தில் உரங்களுக்கான மானியமாக ரூ.51 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமின்றி விவசாயிகளுக்கும் உரத்துக்கான செலவுகள் மிக அதிகமாகி வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் உர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகிறது.
மண்வள அட்டை கொண்டு உரமிடுதல்
தமிழகத்தில் உள்ள பலவகையான மண்களில் ஊட்டச்சத்து நிலை மாறுபடுகிறது. எனவே, அனைத்து வகை மண்ணுக்கும் ஓரே அளவு உரமிடுதல் அவசியமற்றது.
தேவைக்கு அதிகமான உரத்தை பயன்படுத்தும்போது விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகமாகிறது. மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் தங்களது மண்ணை பரிசோதித்து மண்வள அட்டை பெற்று அதன்படி உரமிடுதல் அவசியம். மண் பரிசோதனை செய்ய அந்தந்தப் பகுதி வேளாண்மை விரிவாக்க மையம், அக்ரி கிளினிக்குகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை அணுகலாம்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்:
பயிருக்கு தழைச்சத்து கொடுக்க உரங்களை மட்டும் பயன்படுத்துவதை குறைத்து மாற்று முறைகளையும் கையாளலாம். உயிர் உரங்களானஅசோஸ்பைரில்லம், ரைசோபாடீயா போன்றவற்றை உபயோகிக்கலாம். நெற்பயிரில் நாற்று நடுவதற்கு முன்பு தக்கை பூண்டை விதைத்து உழுவதின் மூலம் தழைச்சத்தை பசுந்தாள் உரமாக தரலாம்.
இந்த பசுந்தாள் உரத்தால் ஹெக்டேருக்கு 45 கிலோ நைட்ரஜன் (100 கிலோ யூரியா தரும் அளவுக்கு) சத்து பயிருக்கு கிடைக்கும். மேலும் யூரியாவை அப்படியே நிலத்தில் இடுவதால் ஆவியாதல் மூலம் சத்து விரயமாகும். எனவே, வேப்பம் புண்ணாக்குடன் நன்கு கலந்து இடுவதால் சத்து விரயமாவதைத் தடுக்கலாம்.
தேவைக்கு அதிகமான தழைச்சத்து இடுவதால் பூச்சி நோய் தாக்குதல், பாஸ்பரஸ் அதிகரித்து மகசூலும் குறையும்.
பாஸ்பரஸ் கரைத்து பயிருக்கு அளிக்க உயிர் உரமான பாஸ்போ பாக்டீரியாவை பயன்படுத்தலாம். இவ்வாறு பாஸ்போ பாக்டீரியாவை மண்ணில் மேம்படுத்துவதால் பாஸ்பேட் உரம் விரயமாகாது தடுக்கப்படும்.
மண்வள அட்டையை உபயோகித்து பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டுமே பொட்டாஷ் உரம் உபயோகிக்க வேண்டும்.