Sunday, August 22, 2010

தேங்காய் அறுவடைக்கு ஏற்ற தருணம்


இந்திய அளவில் தேங்காய் பயிரிடுவதில் தமிழ்நாடு சற்று குறைவாக உள்ள போதிலும் அதிக உற்பத்தித் திறன் காரணமாக இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் 34 சதவீதத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது.
  • இதில் கோவை, தஞ்சை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 80 சதவீதம் பங்கினை அளிக்கின்றன. வரும் மாதங்களில் தேங்காய் அறுவடை செய்தால் நல்ல விலை கிடைக்குமா, இல்லையா என தென்னை விவசாயிகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
  • மொத்த உற்பத்தியில் 35 சதவீதம் மட்டுமே எண்ணெய் உபயோகத்துக்கு பயன்பட்டாலும் தேங்காய் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை தேங்காய் எண்ணெயின் விலையைப் பொருத்தே உள்ளன. கடந்த ஆண்டில் உணவு எண்ணெய் சுமார் 80 லட்சம் டன்னுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டதால், இந்திய அளவில் எண்ணெய் விலை தேக்கநிலை அல்லது குறைந்தபடி உள்ளது.
  • எண்ணெய் பிழிவோர் சங்கத்தின் ஆய்வின்படி 6.6 லட்சம் கொப்பரையும், 4.3 லட்சம் டன் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் என்றும் கணக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டைவிட 1.5 சதவீத அளவு இது அதிகமாக இருக்கும்.
  • தேங்காய் ஓட்டின் நிறம், எடை, அளவு மற்றும் அதைத் தட்டும்போது வரும் ஒலி இவற்றைக் கொண்டு தரம் நிர்ணயிக்கப்பட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. தரம் மற்றும் எண்ணெய் பிழிதிறன் அதிகமாக உள்ளதால் பொள்ளாச்சி பகுதிகளில் விளையும் தேங்காய் அதிக விலை பெறுகிறது. தேங்காயிலிருந்து 17 சதவீத அளவு கொப்பரையும், கொப்பரையிலிருந்து எண்ணெய் 60 – 65 சதவீதம் கிடைக்கிறது.
  • பிப்ரவரி முதல் ஜூன் வரை தேங்காய் வரத்து அதிகமாகவும், ஜூலை முதல் டிசம்பர் வரை வரத்து குறைவாகவும் இருக்கும். உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தின் ஆய்வு முடிவுகளின்படி தேங்காயின் விலை ஜூலை மாதத்துக்கு பிறகு அதிகரிக்கத் தொடங்கும். எனவே இந்த காலகட்டத்தில் தேங்காய் அறுவடை செய்தால் அதன் விலை நிலவரம் எப்படி இருக்கும்.
  • இனி வர உள்ள பண்டிகை காலத் தேவைகளுக்கு பிகார், உத்தரப்பிரதேசம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களிலுள்ள வர்த்தகர்கள் அதிக அளவு கொள்முதல் செய்வார்கள். பொள்ளாச்சிப் பகுதியில் தேங்காயின் பண்ணை விலை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ரூ.5 முதல் ரூ.5.50 ஆகவும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ரூ.5.50 முதல் ரூ.6 வரையும் இருக்கும் என ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.