Tuesday, September 21, 2010

பொன்னாங்கண்ணிக் கீரை வளர்ப்பது எப்படி


பொன்னாங்கண்ணிக் கீரையில் “தங்கசத்து’ உண்டு என்றும் இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதியடையும் உண்மை என்றும் கூறுவர்.
இதனை “பொன் ஆம் காண் நீ’ “இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய்’ என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது எனக்கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையைச் செம்மையாய் நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு கூட்டி, புளியை நீக்கி கற்ப முறைப்படி ஒரு மண்டலம் உட்கொள்ள, உடல் அழகுபெறும். பொன்னிறமடையும், கண் குளிர்ச்சி உண்டாகும். மேலும் நோயற்ற நீண்ட ஆயுளும் பெறலாம்.
தொட்டிகளில் பராமரிப்பு:
  • பொன்னாங்கண்ணி மற்றும் கரிசலாங்கண்ணி கீரைகளை வேர்ச்செடி மற்றும் நுண்தண்டு மூலம் பயிர்பெருக்கம் செய்யலாம்.
  • வீடுகளில் எளிய முறையில் பராமரிக்கலாம். மண் தொட்டியில் மணல், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு இவற்றை 3:1:1 விகிதத்தில் கலந்து தொட்டியில் நிரப்பி வேர்ச்செடிகள் அல்லது நுண்தண்டுகளை நடவேண்டும்.
  • பின்னர் பூவாளி வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • இதற்காக மண்புழு கம்போஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
  • ஒவ்வொரு மண் தொட்டிக்கும் 500 கிராம் அளவு மண்புழு கம்போஸ்ட் உரத்துடன், நன்மை தரும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம்,பாஸ்போபாக்டீரியா, மைக்கோரைசா ஆகியவற்றை தொட்டிக்கு தலா 50 கிராம் வீதம் கலந்து ஆண்டுக்கு இரண்டு முறை (6 மாத இடைவெளியில் இடவேண்டும்).
பாத்தியில் வளர்த்தல்:
  • மண்ணை நன்றாக வெட்டி 1 சதுர மீட்டர் பாத்திக்கு 2 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை இட்டு மண்ணுடன் கலக்கி இட அளவுக்கேற்ப சிறிய பாத்திகளை அமைக்கலாம்.
  • வேர்களை உடைய பக்கச் செடிகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.
  • பாத்தியில் ஒரு அடி இடைவெளியில் செடிகளை நடவு செய்வது நல்லது.
  • தொட்டியில் பராமரிக்கும்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இயற்கை உரங்களான மண்புழு உரம் மற்றும் கம்போஸ்ட் (1 கிலோ / தொட்டிக்கு) இடவேண்டும்.
  • தொட்டியிலும் பாத்தியிலும் செடிகளுக்கு தகுந்த ஈரப்பதம் இருக்கும் வகையில் நீர் தெளிக்க வேண்டும்.
  • இலைகள் அதிகம் தழைத்து வர இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா(லிட்டருக்கு 3 மிலி அளவு) தெளிப்பது நல்லது.
  • செடிகளை நட்ட 4வது மாதத்தில் இலைகளைத் தண்டுடன் கிள்ளி அறுவடை செய்யலாம்.
  • தரைமட்டத்திலிருந்து 5 செ.மீ. உயரத்தில் முழுச்செடியை வெட்டி எடுக்கலாம்.