Monday, September 6, 2010

சம்பா பருவ நெல் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி


நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், வடகிழக்கு பருவமலை பின்தங்கியதாலும் நெல் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நடுத்தர வயதுடைய ஏடிடீ 39, டீலக்ஸ் பொன்னி (பீபிடி 5204), கோ 43 மற்றும் திருச்சி 1, நெல் ரகங்கள் நாற்றங்கால் அமைக்கப்பட்டு 40 நாட்கள் வரை தாண்டிய நிலையில் இன்று வரை நடவு செய்ய முடியவில்லை. மேலும் நிலக்கொதிப்பின் காரணமாக நாற்றுகள் வெளுத்தும் கருகியும் காணப்படுகின்றன.  எனவே 30 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை மட்டும் பராமரித்து நடவு மேற்கொள்ளலாம். 30 நாள் வயதை தாண்டிய நாற்றுக்களை நடுவதால் சரியாக தூர்கள் பிடிக்காது. சீராக விளையாது. எனவே மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். எனவே பின்தங்கி வரக்கூடிய பருவமழையை பயன்படுத்தி சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்ய இனி குறுகிய கால ரகங்களான ஏடிடீ 43 ( செல்லப்பொன்னி), ஏடிடீ 45, ஏஎஸ்டி16 (பால் ஒட்டு) போன்றவைகளை சாகுபடி செய்யலாம்.
இந்த ரகங்களும் குலை நோய் தாக்குதலுக்கு உட்படுவதால் குலை நோய் வராமல் தடுக்க விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மேலும் பழுப்பு இலைப்புள்ளி நோய், இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் நோய், தண்டு அழுகல் நோய், ஊதுபத்தி நோய், நெல்மணி நிறமாற்ற நோய் என பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. அவை விதைகள் மூலமாகவும் பரவுகின்றன. பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம் தங்கியிருக்கின்றன. விதை முளைக்கும்போது பூசண வித்துக்களும் முளைத்து சாதகமான சூழ்நிலையில்  நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன.
கட்டுப்படுத்துவது எப்படி…?:
நெல் விதைகளை ஊற வைப்பதற்கு சற்று முன்னர் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம், சூடோமோனாஸ் புளுரசன்ஸ் என்ற உயிரியல் காரணி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்தவுடன் நீரில் ஊற வைக்க வேண்டும். சூடோமோனாஸ் கிடைக்காவிடில் நெல் விதைகளை ஊறவைப்பதற்கு முன்பாக கார்பன்டசிம் அல்லது பைரோகுயிலான் அல்லது டிரைசைக்குளோஜோல் (வணிகப் பெயர்: பீம்) போன்ற மருந்துகளில் ஒன்றினை ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து ஒரு நாள் வைத்திருந்து பின்னர் வழக்கம்போல் நீரில் ஊறவைத்து முளைப்பு கட்டி விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்வதால் நாற்றங்காலில் சாதகமான சூழ்நிலைகளில் தாக்கும் குலைநோயினை தடுக்க இயலும். மேலும் வயதான (30 நாட்கள்) நாற்றுக்களை நடும்போது வரிசை நடவு முறையில் (20 செ.மீ., து 10 செ.மீ.,) நெருக்கி நட வேண்டும்.
வயதான நாற்றுக்கள் நடுவதால் ஏற்படும் குறைவான சிம்புகள் பிடிப்பது இதனால் சரிகட்டப்பட்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது ஏஎஸ்டி 16 (அம்பை 16 என்ற பால் ஒட்டு நெல்) ஆதாரநிலை நெல் விற்பனைக்கு உள்ளது. ஒரு கிலோ விதையின் விலை ரூ.20 ஆகும். எனவே தேவைப்படும் விவசாயிகள் ஆராய்ச்சி நிலையத்தை அணுகி விதையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.