Wednesday, January 19, 2011

துவரையை தனிப்பயிராக செய்தால் லாபம் பெறலாம்:


நாளுக்கு நாள் துவரம் பருப்பின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழ்நிலையில் விவசாயிகள் துவரைச் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம். தற்போதுள்ள பருவம் துவரைச் சாகுபடிக்கு ஏற்ற பருவம் என்று வேளாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் துவரையை பெரும்பாலும் மணிலாவில் ஊடுபயிராக பயிர் செய்கின்றனர். மணிலாவில் செலுத்தும் கவனம் ஊடுபயிராக செய்யும் துவரையில் செலுத்தாததால், துவரை சரியாக விளைவதில்லை என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் தவறாக ஏற்பட்டுள்ளது.
மேலும் துவரையை 5 மாதம் முதல் 6 மாதம் வரை வளர்க்க வேண்டும் என்ற கருத்தும் விவசாயிகள் மத்தியில் உள்ளது.
தற்போது 120 நாள்களில் (4 மாதம்) விளையக் கூடிய துவரை ரகங்கள் எல்லாம் வந்துள்ளன. வம்பன்-4, ஏபிகே 1, ஐபிசிஎல் போன்ற ரகங்கள் 120 நாள்களில் விளைந்து பயன்தரக் கூடியவை.
துவரைப் பயிர் செய்வதன் மூலம் ஏக்கருக்கு 600 கிலோ வரை அறுவடை செய்ய முடியும். ஒரு கிலோ ரூ. 80-க்கு விற்றால் கூட ரூ. 48 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.
இந்த துவரை உற்பத்தி செய்ய, 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செலவுகள் ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம் மட்டுமே ஆகும்.
தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயறு வகை, பயிர்கள் உற்பத்தி செய்ய வேளாண் துறை மூலம் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
இத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஜிப்சம், நுண்ணூட்டச்சத்து, ஸ்பிரேயர் மற்றும் தேவையான மருந்துகளை 50 சதவீத மானியத்திலும் துவரை சாகுபடி செய்வதற்கு பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தைச் சேர்ந்த வேளாண்மை உதவி அலுவலர்கள் கூறுகையில், “வேலூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் ஒட்டுமொத்தமாக 1500 ஏக்கரில் துவரை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
அவர்கள் ஏக்கருக்கு ரூ. 54 ஆயிரம் வரை லாபம் சம்பாதிக்கின்றனர். அதுபோல் இங்கு துவரையை தனிப் பயிராக பயிர் செய்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் சம்பாதிக்கலாம். மேலும் துவரைப் பயிர் செய்வதன் மூலம் மண்ணின் வளமும் பாதுகாக்கப்படும்.