ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் கோடைப்பருவகாலங்களில் துவரை பொதுவாக சாகுபடி செய்யப்பட்டாலும், ஆடிப்பட்டத்தின் சாகுபடி பரப்பு அதிகமாக உள்ளது. நடைமுறை சாகுபடியில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் நேரடி விதைப்பாக உழவு சால்களில் விதைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் துவரையை நாற்றுவிட்டு நடவு செய்து நல்ல விளைச்சல் கண்டு வருகின்றனர்.
முக்கிய நடவுமுறை சாகுபடி நுட்பங்கள்:
- துவரை நடவு செய்வதற்கு 3 வாரங்களுக்கு முன் நன்கு மக்கிய எருவை ஏக்கருக்கு 5 டன் அல்லது மண்புழு உரம் ஏக்கருக்கு 2.5 டன் என்ற அளவில் இடப்படுகிறது.
- இறவை மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை 5′ x 3 அடி இடைவெளியிலும் (2904 செடிகள்/ஏக்கர்) நடவுப்பயிர் சாகுபடி செய்யக்கூடிய இடங்களில் 6′ x 3 அடி இடைவெளியிலும் (2420 செடிகள்/ஏக்கர்) குழிகள் எடுக்கப்படுகின்றன.
- நாற்றங்காலுக்கு 1 கிலோ விதை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- ஒரு கிலோ விதையை 0.2 சதம் கால்சியம் குளோரைடு (20 கிராம்/லிட்டர்) கரைசலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் 7 மணி நேரம் நிழலில் உலர்த்தப்படுகிறது. இவ்விதையினை 100 கிராம் ரைசோபியம், 100 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள், டிரைகோடெர்மா (10 கிராம்/ கிலோ) பூஞ்சாணத்துடன் கலந்து விதைநேர்த்தி செய்யப்பட்டு விதைக்கப் படுகிறது.
- மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் அளவுள்ள பாலிதீன் பைகளில் (6” x 4”) நிரப்பி விதைக்கப் பயன்படுத்தப் படுகின்றன.
- பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க 3-4 துளைகள் போடப்படுகின்றன. பின் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைத்து ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்கப்படுகிறது.
- இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 30-40 நாட்கள் பராமரிக்கப்பட்டு நடவுக்கு பயன்படுத்தப் படுகின்றன. நடுவதற்கு சில நாட்களுக்கு முன் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின் நடவு செய்வது நல்லது.
நடவுமுறை:
- நாற்றுக்களை நடுவதற்கு 15 நாட்களுக்கு முன் குழிகளை மண், எருவைக் கொண்டு நிரப்பி ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்யப்படுகின்றன.
- ஊடுபயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன் உளுந்து, பாசிப்பயறு, சோயாமொச்சை போன்ற பயிர்களை விதைத்து பிறகு நடவு மேற்கொள்ளப்படுகின்றது.
- நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யப் படுகிறது. பின் மண்ணின் ஈரத்திற்கேற்ப 3-4 முறை பாசனம் செய்யப்படுகின்றது.
- நடவு செய்த 30-40 நாட்கள் வரை களையின்றி பராமரிக்கப்படுகிறது. நடவுப்பயிர்களில் கிளைகள் அதிக எண்ணிக்கைகளில் தோன்றுவதால் செடிகள் சாயாமல் இருக்க மண் அணைத்து பராமரிக்கப்படுகிறது.
உர நிர்வாகம்:
- நடவு நட்ட 20 முதல் 30 நாட்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன் ஏக்கருக்கு 10:23:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கும் வகையில் டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்களும், துத்தநாகம், கந்தகச் சத்து அளிக்கும் துத்தநாக சல்பேட் (10 கிலோ) உரங்களும் செடியைச் சுற்றி இடுவதால் நல்ல விளைச்சல் கிடைக்கிறது.
- நடவு செய்த 20-30 நாட்கள் கழித்து 5-6 செ.மீ. அளவுக்கு நுனி குருத்தைக் கிள்ளி விடவேண்டும். பூ உதிராமல் தடுக்க பிளானோபிக்ஸ் ஊக்கியை பூக்கும் காலத்தில் 0.5 மி.லி./லிட்டர் தண்ணீர் பயன்படுத்த வேண்டும்.
- சோள விதைகளை துவரை வயலில் விதைத்து பறவைகள் அமர்வதற்கு ஏதுவாக வழிவகை செய்வது பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கிறது.