Saturday, March 12, 2011

மானாவாரிக்கு ஏற்ற மக்காச் சோளம் சாகுபடி


தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை முத்துச்சோளம், சாமை, தினை, கேழ்வரகு, வரகு உள்ளிட்ட நவதானியங்கள்தான் பெரும்பாலும் நமது உணவுப்  பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தன.
மானாவாரிப் பயிர்களான நவதானியங்கள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உணவுப் பழக்கவழக்கத்தில் இருந்தும், விவசாயத்தில் இருந்து குறையத் தொடங்கி விட்டன. பின்னர் அந்த இடத்தை அரிசி பிடித்துக் கொண்டது. இதனால் நவதானியங்கள் உற்பத்தி வெகுவாகக் குறைந்து விட்டது. கடந்த சில ஆண்டுகளாக மானாவாரி நவதானியங்கள் உற்பத்திக்கான தளத்தை மக்காச் சோளம் பிடிக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது தமிழகத்தில் மக்காச் சோளத்தின் ஆண்டுத் தேவை 8 லட்சம் டன். கோழிப் பண்ணைகளில் தீவனமாக மக்காச் சோளம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் தமிழகத்தில் மக்காச் சோளத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
ஆனால் தமிழகத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் மக்காச் சோளம் மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. 1990-91 ம் ஆண்டில் தமிழகத்தில் 5.49 டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் 2005-06-ம் ஆண்டில் 2.31 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டருந்தது.
வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கும் இறவைப் பாசனத்தில் 4 லட்சம் ஏக்கரில் மக்காச் சோளம் பயிரிட வாய்ப்பு இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் மக்காச் சோளத்தில்
  • சித்ரா,
  • சி.டெக்,
  • எம்.கோல்டு 900,
  • என்.கே. 6240,
  • ஹைசெல்
உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஏக்கருக்கு 7 கிலோ விதை பயன்படுத்தப்படுகிறது. செலவு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரைதான். ஏக்கருக்கு 30 முதல் 35 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
தற்போதைய விலை குவிண்டாலுக்கு ரூ. 1,000 ஆக உள்ளது. மக்காச் சோளத்தின் விலை சில நேரங்களில் குவிண்டால் ரூ. 1,700 வரை உயர்ந்தும்  இருக்கிறது. வரும் மாதங்களில் குவிண்டால் ரூ.1,200 வரை இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே அறுவடை செய்த மக்காச் சோளத்தை உலர்த்தி தூற்றி பாதுகாப்புடன் சேமித்து வைத்து இருப்பவர்களுக்கும், ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை ஆகும் இறவைப் பருவ மக்காச் சோளத்துக்கும் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் விற்பனைத் துறை தெரிவிக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் மங்களூர், நல்லூர் வட்டாரங்களில் மக்காச் சோளம் 2 ஆண்டுகளுக்கு முன், சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு 30 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. அதிகபட்சம் 5 மாதங்களில் மக்காச் சோளம் அறுவடைக்கு வந்துவிடும். மானாவாரிப் பயிராக இருப்பதால் செலவு மிகவும் குறைவு. பூச்சித் தாக்குதலும் இல்லை என்கிறார்கள்.
சாதாரண காலங்களில் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 850 வரை விலை கிடைக்கிறது. இந்த அடிப்படையில் கணக்கிட்டால் ஏக்கருக்குச் செலவு போக குறைந்த வருவாய் ரூ.15 ஆயிரமாகவும், அதிகபட்ச வருவாய் ரூ.30 ஆயிரமாகவும் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
மக்காச் சோளம் விதை பெரும்பாலும் நிறுவனங்களில் இருந்து விற்பனை செய்யப்படுவதால், விதை விலை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் பல விவசாயிகள் மக்காச் சோளத்தை வயலுக்கு வரும் வியாபாரிகளிடமே விற்பனை செய்கிறார்கள்.
இதனால்தான் விலை குறைவாக இருக்கிறது. விதைகளை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் நேரடியாக விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள்.
மானாவாரிக்கு சிறந்த பயிராகவும், வணிகப் பயிராக மாறிவருவது மட்டுமன்றி, விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் பயிராகவும் மக்காச் சோளம் உள்ளது.