Tuesday, September 27, 2011

மகசூல் அதிகரிக்க சிறந்த வழி திருந்திய நெல் சாகுபடி முறை


தருமபுரி மாவட்டத்தில் சம்பா பருவத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 45,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பருவத்தில் சராசரி நெல் உற்பத்தி 2,650 கிலோ என்ற அடிப்படையில் உள்ளது. இது சராசரி உற்பத்தித் திறனில் 50% மட்டுமே. எனவே, உற்பத்தித் திறனை உயர்த்த திருந்திய நெல் சாகுபடி முறையே சிறந்த வழி.
  • குறைந்த விதை,
  • இளம் நாற்றுகள் நடவு செய்தல்,
  • அதிக இடைவெளியில் சதுர முறையில் நடவு,
  • களைக் கருவி பயன்பாடு,
  • நீர்மறைய நீர்ப் பாய்ச்சுதல்
ஆகியவை இம்முறையின் சிறப்பு அம்சங்கள்.
நாற்றங்கால் பராமரிப்பு:
சாதாரண முறையில் ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய, 20 கிலோ விதை தேவை. திருந்திய நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 3 கிலோ விதை போதுமானது. விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசென்ஸ், நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் ஒரு பாக்கெட் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஒரு பாக்கெட் கலந்து விதை நேர்த்திசெய்ய வேண்டும்.
முளைப்பு கட்டி, பின் விதைப்பு செய்ய வேண்டும். ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதுமானது. 5செ.மீ., பரப்பு கொண்ட 8 மேடை பாத்திகள் அமைத்து, விதைகளை தூவி நாற்றாங்கால் மீது வைக்கோல் பரப்பி பூவாளி மூலம் 3 நாள்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
பின்னர், வைக்கோலை நீக்கிவிட்டு சாதாரண முறையில் பாசனம் செய்ய வேண்டும். இப்படி தயாரிக்கப்பட்ட நாற்றங்காலில் நாற்றுகள் 14 நாள்களிலேயே தயாராகிவிடும்.
நடவு செய்தல்:
நன்கு சமப்படுத்தப்ட்ட வயலில் 14 நாள்கள் வயதுடைய இளம் நாற்றுகளை அதிக இடைவெளியில் சதுர முறையில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். ஒரு சதுர மீட்டரில் 20 குத்துகள் இருக்கும் வகையில் நடவு செய்ய வேண்டும்.
நடவு அடையாளமிடும் கருவி அல்லது அடையாளமிடப்பட்ட கயிறு பயன்படுத்தலாம்.
களைக்கருவி பயன்பாடு:
நடவு செய்த 10-ம் நாள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் கோனோ களைக் கருவி கொண்டு குறுக்கும், நெடுக்குமாக வரிசைகளுக்கு இடையே ஓட்டி களை நீக்கம் செய்ய வேண்டும். கருவிக்கு அகப்படாத களைகளை கையால் நீக்க வேண்டும். இதனால் மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்படுகிறது. பழைய வேர்கள் அறுபட்டு, புதிய வேர்கள் தோன்றுகின்றன. அதிக தூர்கள் வெடிப்பதோடு பயிர் நல்ல வளர்ச்சி பெறுகிறது.
உர நிர்வாகம்:
இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி, தழைச்சத்து நிர்வாகம் செய்ய வேண்டும். நடவு செய்த 15-வது நாள் முதல், நன்கு விரிந்த இளம் சோகையுடன் 10 இடங்களில் இலை வண்ண அட்டையில் உள்ள நிறங்களுடன் ஒப்பிட்டு சராசரி நிற எண்ணைக் குறிப்பிட்டு அதற்கேற்ப தழைச்சத்து இட வேண்டும். 10 நாள்களுக்கு ஒரு முறை இவ்வாறு சோதிக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்:
நீர் மறைய நீர்ப் பாய்ச்சுதல் என்ற அடிப்படையில் மஞ்சுக்கட்டும் பருவம் வரை நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்னர், ஒரு அங்குல நீர் இருக்கும் வகையில் பாசனம் செய்ய வேண்டும். நெற்பயிருக்கு பரிந்துரைக்கப்படும் இதர தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை பின்பற்றினால் சாதாரண நெல் நடவு முறையில் பெறும் மகசூலைவிட 25% கூடுதல் மகசூல் பெறலாம்.
ஏக்கருக்கு 750 கிலோ கூடுதலாக கிடைக்கும். எனவே, விவசாயிகள் அனைவரும் திருந்திய நெல் சாகுபடி முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.