பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் பிபிடி 5204 (ஆந்திரப்பொன்னி) கலப்புடன் கொடுக்கப்பட்ட விதையில் நட்டம் அடைந்துள்ளதாக சமீபத்திய நாளேடுகள் பிரசுரித்திருந்தன. கவனத்திற்கு!
திருவள்ளூர் அருகே உயர்ரக நெல் விதையான பிபிடி 5204 விதைத்த விவசாயிகள் பெருத்த நஷ்டம் ஏற்படும் என கவலை அடைந்துள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேளகாபுரம், எஸ்ஆர் கண்டிகை, மாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளான பாஸ்கர், சுரேஷ், பாண்டியன், தியாகராஜன், குணா, கஜேந்திரன், ராமதாஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 250 ஏக்கரில் நெல் பயிர் விதைத்துள்ளனர்.
இவர்கள் ஆந்திர மாநிலத்தில் உற்பத்தி செய்து, அங்கு அரசிடம் தரச்சான்று பெற்று விற்பனை செய்யும் ராசி விதை நிறுவனத்தில் இருந்து சென்னை விதை நிறுவனம் என்ற மொத்த விற்பனையாளர் மூலம் ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு ஏஜென்சியில் நெல்லை வாங்கியுள்ளனர்.இவர்கள் அனைவரும் பிபிடி 5204 என்ற உயர் ரக விதை நெல்லை விதைத்துள்ளனர். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை அறுவடை செய்து சுமார் 30 ஆயிரம் வரை விற்பனை செய்வது வழக்கம்.
இந்த ரகம் நடவு செய்து 140 நாள்களில் முற்றிய கதிராக அறுவடைக்கு தயாராகும். இந்நிலையில் மேற்கண்ட விவசாயிகள் வாங்கிய விதை நெல்லில் சன்னரக கலப்பு விதை இருந்ததால் 55 நாளில் கலப்பு விதைகள் முற்றிய நெல்லாக வளர்ந்துள்ளது.
இதில் வேதனை என்னவென்றால் உயர்ரக நெல்லான பிபிடி 5204 என்ற கதிர் 30 சதவீதம் மட்டுமே விளைந்துள்ளது.
மீதமுள்ள 70 சதவீதம் மட்டரக நெல் முற்றிய நிலையில் விளைந்துள்ளது. தற்போது விளைந்துள்ள ரகம் ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் மட்டுமே விலை போகும் என விவசாயிகள் கூறுகின்றனர். இதில் மேலும் ஒரு சரிவு என்னவென்றால் சன்னரகத்தை அறுவடை செய்தால் 30 சதவீதம் விளைந்துள்ள உயர்ரக நெல் நஷ்டமாகும். உயர்ரக நெல்லுக்காக காத்திருந்தால் தற்போது விளைந்துள்ள 70 சதவீத சன்னரக நெல்லும் நாசமாகும் நிலை உள்ளது.
இதையடுத்து விவசாயிகள் முறையிட்டதன் பேரில் திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் பானுமதி மற்றும் அலுவலர்களும், நெல் விதையை விற்பனை செய்த நிறுவனத்தின் அலுவலர்களும் வந்து நெற்பயிரை பார்வையிட்டனர். பரிசோதனைக்காக விளைந்த நெல்லையும் எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியரை கேட்டபோது நாங்கள் இதுகுறித்து பரிசோதனை செய்த பின்னர் அறிக்கையை வெளியிடுவோம் என்றார். விதை நெல் விற்பனை செய்த அலுவலர்களிடம் கேட்டபோது இதே விதை நெல் கடலூரில் டன் கணக்கில் விற்பனை செய்துள்ளோம். ஆனால் அங்கு எவ்வித பிரச்னையும் எழவில்லை. தற்போது ஆராய்ச்சி நிலைய அறிக்கைக்கு பின்னரே எதுவும் கூறமுடியும் என்றனர். இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.