மதுரையில் பெரியார், வைகை பாசனம் இல்லாததால் சாகுபடி நிலங்கள் தரிசாகவே
உள்ளது. இதனால் பல விவசாயிகள் நெல் சாகுபடி செய்யாமல் பெரும் கஷ்டத்திற்கு
உள்ளாகியுள்ளனர். மீண்டும் இந்த இடத்தில் நெல் சாகுபடி எப்போது வரும் என்று
யாராலும் சொல்ல முடியாது. இருப்பினும் இறைவன் அருளால் கிணற்றுப்பாசனத்தில்
நெல் விவசாயம் துவங்கி விவசாயிகள் திருப்தியாக உள்ளனர். இம்மாதிரியான
விவசாயிகளிடம் அதிக பரப்பளவில் நிலம் இருந்தாலும் விவசாயிகள் குறுகிய
நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்து லாபம் எடுத்துள்ளனர்.
மதுரை
மாவட்டம், வண்டியூர் கிராமத்தில் முற்போக்கு விவசாயி எம்.எ.விஜயநடராஜன்
இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்து வருகிறார். இயற்கை முறையில் இவர் நெல்
சாகுபடிசெய்ததால் பயிர் செழிப்பாக வந்ததோடு அவ்வப்போது பயிரில் வறட்சி
ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படவில்லை. காரணம் இயற்கை முறை சாகுபடியில்
பயிர்கள் ஓரளவிற்கு வறட்சியைத் தாங்குகின்றது. அதேபோல் இந்த பயிரானது கொடிய
பூச்சி, வியாதிகளால் பாதிக்கப்படுவதில்லை. விஜய நடராஜன் ஒன்பது ஏக்கரில்
இயற்கை விவசாயத்தில் இரண்டு நெல் ரகங்களை தேர்ந்தெடுத்து தனித்தனி
வயல்களில் சாகுபடி செய்துள்ளார். இவர் சாகுபடி செய்த விவரம், அனுசரித்த
சாகுபடி முறைகள் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எபீடி 45 - வயது -120 நாட்கள். ஏக்கரில் 36 மூடை மகசூல் (மூடை 66 கிலோ).]
ஒரு மூடை நெல் விலை - ரூ. 1,100.00
வரவு (36 மூடை து ரூ.1,100) - ரூ. 39,600.00
சாகுபடி செலவு - ரூ. 18,000.00
நிகர லாபம் - ரூ. 21,600.00
வைக்கோல் - ரூ. 2,500.00
ஜே-13 வயது-100 நாட்கள். ஏக்கரில் 36 மூடை மகசூல் (மூடை 66 கிலோ)
ஒரு மூடை நெல் விலை - ரூ. 1,100.00
வரவு (36 மூடை து ரூ.1,100) - ரூ. 39,600.00
சாகுபடி செலவு - ரூ. 16,000.00
நிகர லாபம் - ரூ. 23,600.00
வைக்கோல் - ரூ. 2,500.00
ஜே-13 நெல் சாகுபடி செலவு குறைவு. பராமரிப்பு செலவும் குறைவு. வைக்கோல் பஞ்சுபோல் இருக்கும். பசுக்கள் விரும்பி சாப்பிடும்.
உசிலம்பட்டி
கிராமத்தில் 62 வயதுள்ள பி.வி.சண்முகம் என்பவர் எருமைகளை வளர்த்து தனது
அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தார். அவருக்கு பக்கத்தில் உள்ள
கண்மாய் உதவிவந்தது. இதில் தேவையான நீர் இருந்ததால் சண்முகத்திற்கு பிரச்னை
இல்லாமல் இருந்தது. திடீரென்று கண்மாய்களை சரிவர பராமரிக்காமல் விட்டதால்
தண்ணீரே இல்லாமல் போய்விட்டது. உடனே சண்முகம் தனது எருமைகளை
விற்றுவிட்டார். முக்கியமான காரணம் எருமைகளுக்கு குடிக்கத் தேவையான
தண்ணீரைத் தவிர அதற்கு குளிப்பாட்டும் அளவு தண்ணீர் இல்லாமல் போய்விட்டது.
எருமைகளுக்கு இந்த அளவு தண்ணீர் இல்லாவிட்டால் அவைகளுக்கு பால் கொடுக்கும்
திறமை போய் அவை மாண்டுவிடுவதற்கான வாய்ப்பு உண்டு. உடனே இப்பகுதியில் உள்ள
சண்மும் போன்ற பலர் ஒரு திட்டம் தீட்டி தங்கள் ஊருக்கு அருகில் உள்ள
பொண்ணாச்சி கண்மாயில் அதிகமான நீரை சேர்த்தார்கள். இதற்குத் தேவையான
பராமரிப்பு பணிகளையும் செய்தார்கள். சென்ற வருடம் வடகிழக்கு பருவமழை
பெய்யாவிட்டாலும் மக்கள் தற்போது சந்தோஷமாக உள்ளனர். சண்முகம் அதிக அளவு
எருமைகளை வாங்கி தனது பணியைத் துவக்கி சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
தற்போது
கிணற்றுப்பாசனத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய வேண்டிய கட்டாய
சூழ்நிலைக்கு வந்துவிட்டார்கள். இவர்களும் பாடுபட்டு உழைத்து கிணறுகளில்
தண்ணீர் வற்றாமல் இருக்க தொழில்நுட்பங்களை அனுசரிக்கலாம். இதற்காக ஒரு
சமுதாய இயக்கத்தை உருவாக்கி கிணறுகளில் தண்ணீர் நிற்க வழி
கண்டுபிடிக்கலாம்.நெல் பயிர் மிக முக்கியமான உணவுப்பயிர். ஆகையால் அந்த
நிலங்களில் வேறுபயிர்களை சாகுபடி செய்யாமல் நெல் சாகுபடியையே தொடர்ந்து
செய்துவருவதால் அவர்களை நாம் பாராட்ட வேண்டும்.
