Friday, July 12, 2013

பாதி விலையில் பழமரக் கன்றுகள் விநியோகம்

தோட்டக்கலைத் துறை மூலம் 50 சதவீத மானிய விலையில் பழமரக் கன்றுகள் விநியோகம் செய்யப்படவுள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு நெல்லி, சப்போட்டா, முந்திரி, மா போன்ற பழமரக் கன்றுகள் 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்படவுள்ளன. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் தேவையைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பழங்கள் எளிய சர்க்கரைகளைக் கொண்டுள்ளதால், ஆற்றலும் புத்துணர்ச்சியும் தரவல்லவை. உடல் நலனுக்குத் தேவைப்படும் வைட்டமின்களையும், தாது உப்புகளையும், இதர சத்துக்களையும் பழங்கள் மிகுதியாகக் கொண்டுள்ளன. குடல் நலனுக்கும் உதவும். மலச்சிக்கலைத் தீர்க்க வல்லவை. வணிக நோக்கில் அதிக லாபத்தை நீண்ட நாள் தரக்கூடியவை. அடுத்த தலைமுறைக்கும் பலன் தரவல்லவை.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நெல்லி, சப்போட்டா, முந்திரி, மா போன்ற பழமரக் கன்றுகள் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி தங்களுக்கு தேவைப்படும் பழமரக் கன்றுகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.

சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அமைந்துள்ள வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாதி விலையில் பழமரக் கன்றுகளைப் பெற பதிவு செய்து கொண்டு அவற்றை பாதி விலையில் பெற்றுப் பயன் பெறலாம் என்றார் அவர்.