Friday, July 19, 2013

கரும்பு பயிரைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறையும்.

    தமிழகத்தில் கரும்பு சாகுபடி சராசரியாக 3.1 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 325 லட்சம் டன் கரும்பும், 24 லட்சம் டன் சர்க்கரையும் உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முக்கிய தொல்லையாக இருப்பது பயிரைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள் தான். பயிரைத் தாக்கும் நோய்கள், பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தியும், நோய், பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை.

  
கரும்பு பயிரை தாக்கும் நோய்களில் கரும்பின் செவ்வழுகல் நோய் எனப்படும் கொலிடோடிரைகம், பிலிகேட்டம், கரும்பின் கரணை அழுகல் நோய் எனப்படும் செரட்டோசிஸ்டிஸ் பேரடாக்சா, புற்தண்டு நோய் எனப்படும் வைரஸ், கட்டைப்பயிர் குட்டையாதல் எனப்படும் நோய் (பாக்டீரியா), கரும்பின் தேமல் நோய் எனப்படும் கரும்புத் தேமல் நச்சுயிரி ஆகியவை முக்கியமானவை ஆகும்.

   செவ்வழுகல் நோய் எனப்படும் கொலிடோடிரைகம் பில்கேட்டம் நோயின் அறிகுறிகளை கரும்பின் மேற்பாகத்திலும், உட்பாகத்திலும் காணலாம். கரும்பின் மேற்பாகத்திலும், உட்பாகத்திலும் காண்லாம். கரும்பின் மேற்பாகத்தில் நோயுற்ற கணுப்பகுதியில் நோய் பரவும். அதன் கீழேயுள்ள தோகைகள் வெளுத்து மஞ்சள் நிறமாக காணப்படும். இந்நிலையில் நோயுற்ற கரும்பின் தூர்கள் அனைத்தும் காய்ந்துவிடும். பாதிக்கப்பட்ட கணுவில் எண்ணற்ற சிறிய கருமை நிறப்பூசண வளர்ச்சியும் காணப்படும். நோயுற்ற தோகையின் நடு நரம்பில் அடர்சிவப்பு நிற ஓரத்தையும், பழுப்பு நிற மையத்தையும் கொண்டவையாக மாறிவிடும். பாதிக்கப்படாத தோகைகள் காய்ந்துவிடுவதால் ஒடிந்து தொங்குவது தென்படும். இந்நோய் தீவிரமாக தோன்றினால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிராகவும் காய்ந்துவிடும். இவற்றை கட்டுப்படுத்த, நோயினால் தாக்கப்படாத பயிரிலிருந்து பெற்ற கரணைகளை பயிரிட பயன்படுத்த வேண்டும்.நோயுற்ற கரும்பின் பகுதிகள் யாவற்றையும் தங்காமல் சேகரித்து எரிந்துவிட வேண்டும். நோய் பாதித்த அதே நிலத்தில் கரும்பை தொடர்ந்து பயிரிடுவதை தவிர்த்து நெல் போன்ற மாற்று பயிரிட  வேண்டும். நோய் தோன்றிய பின் கட்டைப்பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும். தகுந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்தலாம்.

    கரும்பின் கரணை அழுகல் நோய் எனப்படும்  செரட்டோசிஸ்டிஸ் பேரடாக்ஸா நோய் தாக்கிய கரணைகளை நடுவதற்கு பயன்படுத்தினால் அவை முளைக்காமல் அழுகிவிடும். அக்கரணைகள் நீளவாக்கில் பிளந்து பார்த்தால் உட்திசுக்கள் அழுகியும் செந்நிறமாக மாறிவிடும். இந்நோய் அன்னாசி பழ மணத்தை வெளிப்படுத்துவதால் இது அன்னாசிப்பழ நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் முளைத்த, குருத்துகளையும் தாக்குவதால் சிவந்து வெளிறிக் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த நோயினால் பாதிக்கப்படாத கரணைகளை தேர்ந்தெடுத்து நட பயன்படுத்த வேண்டும். நட்டபின் வயலில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிகால் வசதிகளை பெருக்க வேண்டும். எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயிரிடப் பயன்படுத்துதல் சிறிதே முறையாகும்.

    புற்தண்டு நோய் எனப்படும் வைரஸ் நோய் நோயுற்ற கரும்பிலிருந்து மிகுதியான அளவு தூசுகள் உண்டாகும். இக்கதிர்கள் சிறியவையாகவும், அவற்றிலுள்ள தோகைகள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் காணப்படும். நோயுள்ள கரும்பின் தண்டில் கணுவிடைப்பகுதி குட்டையாக இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் உள்ள மொட்டு ஊக்குவிக்கப்படுவதால் அதிகமான பக்கக்கிளைகள் தோன்றும். இளம்பயிரில் நோய் ஏற்பட்டால், வெளிறிய சிறிய இலைகளுடன் புதர் போன்று அடர்த்தியாக காணப்படும். வளர்ந்த பயிரில் நோய் தோன்றும் போது கரும்பின் மேல் பகுதியில் வெளிறிய பச்சை நிறத்துடன் கூடிய தோகைகளுடன் காணலாம்.நோயுற்ற கரும்பிலுள்ள மொட்டுக்கள் மெல்லியவையாகவும் நீண்டும் வெடித்தும் இருக்கும். இவற்றை கட்டுப்படுத்த நோய் தாக்காத கரும்பிலிருந்து தேர்ந்தெடுத்த விதைக்கரணைகளை நடுவது சிறந்த முறையாகும். நோயுற்ற கரும்பு புதர் போன்றும், உயரம் குறைவாகவும், இதனை எளிதில் அறிந்து களைந்து அழித்துவிடலாம்.

    கட்டைப்பயிர் குட்டையாதல் எனப்படும் பாக்டீரியா நோய் தாக்கிய கரும்பு வளர்ச்சி குன்றி காணப்படும். இவற்றில் தோகைகள் அதிகமாக தோன்றுவதில்லை . கணுவிடைப்பகுதி மிகவும் குட்டையாகவே இருக்கும். தூர் அதிகம் உண்டாவதில்லை. நோயுற்ற கரும்புகளின் வெளிப்படையான அறிகுறிகளிலிருந்து நோயினை எளிதில் அறிய முடியாது. இருப்பினும், நோயுற்ற கரும்புகளை பிளந்து பார்த்தால் குண்டூசித்தலை போன்று சிறு சிறு புள்ளிகளை இளஞ்சிவப்பு நிறத்தில் கணுக்களில் காணலாம். நோயுற்ற விதைக்கரணைகள், சாறு ஆகிவை மூலமாக பரவுகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்த நோயில்லாத வயல்களில் உள்ள முதிர்ந்த கரும்புகளிலிருந்து எடுத்து விதைக்கரணைகளை பயன்படுத்த வேண்டும். வெட்டுக்கத்திகளை தொற்றுநீக்கிகளில் நனைத்தெடுத்த பின் மீண்டும் கரணைகளை வெட்டுவதற்கு பயன்படுத்துதல் நோய் பரவுதலை தடுக்கும்.


   கரும்பின் தேமல் நோய் எனப்படும் கரும்புத் தேமல் நச்சுயுரி நோய் தாக்கிய பயிரின் இலைகள் வெளுத்து காணப்படும். இலைப்பகுதியின் இடையிடையே தோன்றும் இவ்வாறான வெளுத்தல் ஒழுங்கற்ற கோடுகளையோ, பட்டை போன்ற அமைப்பையோ கொண்டிருக்கும். வெளுத்தல் அறிகுறிகள் இளம் இலைகளின் அடிப்பாகத்தின் நன்கு வெளிப்படுகின்றன. வெளுத்தல் அறிகுறிகள் இலை உறைகளிலும் தண்டுபாகங்களிலும் காணப்படும். தண்டு அல்லது வெளிர்பச்சை போன்ற நிறங்களிலும் காணப்படும். கரும்பின் உட்பகுதி அழிந்து கரும்பு முழுவதும் வாடிவிடும். தேமல் அறிகுறியுடன் மஞ்சளாதல், ஒழுங்கற்ர வெளுத்தல் அல்லது மஞ்சளான பகுதிகள் ஒழுங்கற்ற தோன்றல் ஆகிய அறிகுறிகள் இந்நோயினை எளிதில் அடையாளம் காண உதவும். இந்நோயினைக் கட்டுப்படுத்த நோயுராத கரும்பிலிருந்து விதைக்கரணைகளை தேர்ந்தெடுத்து பயிரிட பயன்படுத்த வேண்டும். நோயுற்ர கரும்பு குருத்துகளை களைந்து அழிக்க வேண்டும். இதனால் நோய், பூச்சி மூலம் பரவுவதை தடுக்கலாம்.

thanks to dinakaran