சாதாரண நிலையில் நிலக்கடலையின் முளைப்புத் திறன் குறைந்தபட்சம் 70 சதவீதம் இருக்க வேண்டும். விதைகளைக் கடினப்படுத்தும் முறையில் விதை நேர்த்தி செய்து, விதைப்புப் பணியை மேற்கொள்ளும்போது அதிகமாக 95 சதவீதம் முளைப்புத் திறன் ஏற்பட்டு, அதிக எண்ணிக்கையில் செடிகள் பராமரிக்கப்படுகின்றன. இதனால் 15 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற முடிகிறது.
விதைப்பதற்குத் தேவையான கடலைப் பருப்பை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட வேண்டும். விதையின் கொள்ளளவு எவ்வளவு வருகிறதோ, அதில் பாதி அளவுக்கு மட்டும் நீர் எடுத்துக் கொண்டு, அதில் 0.5 சதம் அளவுக்கு கால்சியம் குளோரைடு கலந்து, அதில் விதைகளை ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் அவற்றை ஈரமான சாக்குத் துணியின் மீது போட்டு, அதன்மீது மற்றொரு ஈரமான சாக்கால் மூடி ஒரு நாள் முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் லேசாக முளைவிட்ட விதைகளைத் தனியாகச் சேகரிக்க வேண்டும். இம் முறையை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, திரும்பச் செய்வதால் முளைக்கும் தன்மையுடைய விதைகளை தனியாகச் சேகரிக்கலாம்.
விதைகளை நிழலில் உலர்த்தி விதையின் ஈரப் பதத்தை 10 சதத்துக்குக் கொண்டு வர வேண்டும். இந்த விதைகளை 7 முதல் 10 நாள்கள் வரை வைத்திருந்து விதைக்கலாம். இம் முறையில் முளைப்புத் திறன் இல்லாத விதைகள் எளிதாக இனம் காணப்பட்டு, ஒதுக்கி வைக்கப்படுகிறது. விவசாயிகள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.