Sunday, August 8, 2010

செம்மை நெல் சாகுபடி, வாழையில் புதிய நடைமுறை – கரூர் விவசாயக் கண்காட்சி செய்திகள்


செம்மை நெல் சாகுபடி மேற்கொண்டால் இரண்டு மடங்கு பலன் பெறலாம் என்றார் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. திரவியம்.
கரூர் மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலமாக கரூரில் வேளாண் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் செவ்வாய்கிழமை தொடங்கியது.
புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் புழுதேரி வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை) தே. தனசேகர் வாழைசாகுபடி குறித்து பேசியது:
வாழை சாகுபடி செய்யப்படும் பரப்பளவிலும், உற்பத்தியிலும் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எனினும், ஏற்றுமதி வாய்ப்புகள் இங்கு இல்லை. வாழைப்பழம் 20 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவைகள் பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. 350 மெட்ரிக் டன் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
எனினும், வாழைப்பழத்துக்கு வெளிநாடுகளில் அதிக அளவில் தேவை உள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் அதிக தொலைவும், உற்பத்திக்கான செலவும் அதிகரிக்கிறது.
இந்தியாவில் வாழைப்பழம் உற்பத்தி செய்ய ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை செலவாகிறது. வெளிநாடுகளில் கிலோவுக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகிறது.
இந்தியாவில் இச் செலவினைக் குறைக்க தற்போது அடர்நடவு முறை என்ற புதிய நடவு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால், 35 சத கன்றுகள் கூடுதலாகப் பயிரிடப்படுகிறது. இந்த முறையால் 20 சத உற்பத்தி அதிகரிப்பதோடு, 20 சத செலவினங்களும் குறையும். இந்த முறையை குளித்தலை, லாலாப்பேட்டை வட்டாரங்களில் செயல்படுத்தி வருகிறோம் என்றார்.
முன்னதாக, செம்மை நெல் சாகுபடி குறித்து வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. திரவியம் பேசியது:
செம்மைநெல் சாகுபடி முறையானது 1983 -ல் கிழக்கு மடஸ்காரில் லனானி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு இம்முறை அறிமுகமானது. இம்முறையில் ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ விதை போதுமானது. பழைய முறையில் 20 முதல் 30 கிலோ வரை தேவைப்பட்டது. மேலும், இயற்கை, இயற்கை உரங்களை பயன்படுத்தினால் அதிக அளவில் சாகுபடி பெறலாம். இதற்காக 6 வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.
நல்ல விதைகளைத் தேர்ந்தெடுத்து நாற்றங்காலில் நடவு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக நிலத்தை நன்றாக உழவு செய்து சுமார் 5 டன் எரு போன்ற உரங்களை தளைச்சத்தாக இட வேண்டும். ஒரு மாதமான நாற்றுகளை பறித்து இடைவெளி விட்டு நட வேண்டும்.  காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் விட வேண்டும்.  கோனோவீடரை பயன்படுத்தி களைகளை எடுப்பத்தால் பயிர்களுக்கிடைய இடைவெளி ஏற்பட்டு காற்றோட்டத்தையும், வேர் விடுவதற்கான சூழலையும் ஏற்படுத்தும்.
பூச்சித்தாக்குதல் குறைவதோடு, வைக்கோலும் அதிகமாகக் கிடைக்கும். இந்த முறையை விளக்க கரூர் மாவட்டத்தில் நெய்தலூர், நச்சலூர், முதலைப்பட்டி, ஒந்தாம்பட்டி ஆகிய கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இயற்கை உரங்களை பயன்படுத்தி செம்மை நெல் சாகுபடி செய்யும் பொழுது இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் மரவள்ளி சாகுபடி குறித்து வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சு. ஈஸ்வரன், கறவைமாடு வளர்ப்பு மற்றும் தீவனப்புல் வளர்ப்பினை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்சி மைய தலைவர் க. செந்தில்வேல், நவீன வேளாண்மையில் பண்ணைக் கருவிகள் குறித்து உழவியல் பேராசிரியர் ச. பன்னீர்செல்வம், உள்நாட்டு மீன் வளர்ப்பு குறித்து மீன் துறை ஆய்வாளர் வ. அப்துல்காதர் ஜெய்லானி, பட்டு வளர்ப்பு குறித்து பட்டுவளர்ச் சித்துறை உதவி இயக்குநர் சு. கோலாசுவாமி, உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து
வேளாண் துணை இயக்குநர் சு. ஷோபா, வனப் பாதுகாப்பு குறித்து வனச்சரகர் அ. நாகராஜன் ஆகியோர் பேசினர்.