மலைப்பகுதிகளில் நீரோட்டம் இருக்கும் இடங்களில் மட்டுமே மலைவேம்பு வளர்ந்து நிற்கிறது. எனவே இதற்கு நீர்ப்பாசனம் அவசியம். கன்று நடவு செய்தபிறகு முதல்3 ஆண்டுகளுக்கு வாரம் ஒரு முறை கட்டாயம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எனவே தண்ணீர் பாசன வசதி இல்லாத இடங்களில் சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும். மீறிச்செய்தால் பொருளாதார ரீதியாகப் பலன் கிடைக்காது. அதே சமயம் நீர் தேங்கி நிற்கும் களிமண் நிலத்தில் சாகுபடி செய்தாலும் கன்றுகள் அழுகிவிடும். எனவே வடிகால் வசதியுள்ள நிலமாக இருக்க வேண்டும்.
கன்று நடவு செய்த இரண்டாம் ஆண்டே தீக்குச்சி கம்பெனிகளுக்கு விற்கலாம். மின்சாரம் தயாரிக்க எரிபொருளாகவும் மலைவேம்பு மரங்களைப் பயன்படுத்தலாம். நான்கு ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த மரங்கள் பிளைவுட் தொழிற்சாலைகளில் இருந்து வந்து வாங்கிக் கொள்கிறார்கள். பூச்சிகள் அரிப்பதில்லை. எனவே வீடுகளில்கூட மரச்சாமான்களுக்காக இம்மரத்தை பயன்படுத்துகிறார்கள்.
