Saturday, February 5, 2011

அறுவடைக்கு அப்புறம் என்ன செய்யலாம்?


மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. ஐந்து மாவட்டங்களிலும் எடீடி 45 நெல், நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. பெருவெட்டு நெல் அம்பை 16ம் நல்ல மகசூல் கொடுத்துள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். அணைக்கட்டுகளிலும், கண்மாய்கள் மற்றும் கிணறுகளிலும் தண்ணீர் வசதி சிறப்பாக உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலை கீழ்க்கண்ட பயிர்களை சாகுபடி செய்ய ஒரு வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.
நெல் சாகுபடி:
பாசன வசதி நல்லபடியாக இருக்குமிடங்களில் தைரியமாக நெல்லினை சாகுபடி செய்யலாம். தற்போது குறுகிய கால நெல் ரகங்களான ஜே-13 மற்றும் ஆடுதுறை 36 நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம். பச்சரிசிக்கு ஏற்ற கர்நாடகா பொன்னியை சாகுபடி செய்யலாம். ஆனால் இது பூஞ்சாள வியாதி தாக்குதலால் பாதிக்கப்பட்டு கருப்பு நெல் விழும். இதை கவனித்து ஆராய்ந்து செயல்பட வேண்டும். அடுத்து எல்லா பட்டங்களுக்கும் ஏற்ற 100 நாள் நெல்லாகிய ஜே13 போடலாம். தவறாமல் பலன் தரக்கூடிய ஜே13 நெல் ரகத்தைப் பற்றி மதுரை விவசாயிகள் நன்கு அறிவார்கள். அடுத்து ஆடுதுறை 45 ரகத்தை விவசாயிகள் போட விரும்புகின்றனர். இருப்பினும் பூஞ்சாள நோய் வராமல் தடுக்க திறன் பெற்றவர்கள் சாகுபடியில் ஈடுபடலாம்.
காய்கறி சாகுபடி:
தற்போது காய்கறி சாகுபடி செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். ஆனால் காய்கறி சாகுபடி கடுமையானது. விவசாயிகள் பாடுபட்டு காய்கறி சாகுபடி செய்யலாம். குறுகிய கால காய்கறியான வெண்டையை சாகுபடி செய்து அதில் ஊடுபயிராக சீனி அவரையை (கொத்தவரை) சாகுபடி செய்யலாம். இப்பயிர் மாசி மாதத்தில் நல்ல மகசூல் தருகின்றது. வெண்டையில் இருபது அறுவடைகள் வரை கிடைக்கும். காய்கறி சாகுபடியில் பாடுபட்டு உழைத்தால் ஏக்கரில் குறுகிய காலத்தில் ரூ.8,000 வரை லாபம் எடுக்கலாம்.
உளுந்து சாகுபடி:
தை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்யலாம். பாசன வசதி குறைவாக இருக்கும் இடத்தில் உளுந்து சாகுபடி செய்யலாம். விவசாயிகள் நஞ்சை நிலத்தை உழுது புழுதியாக்கி டி9  உளுந்தினை (வயது 90 நாட்கள்) விதைக்கலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். நிலத்திற்கு தொழு உரத்தோடு உயிர் உரங்களையும் அடியுரமாக இடலாம். வளர்ந்த செடிகள் மேல் டி.ஏ.பி. கரைசல் தெளிக்கலாம். சங்கு பருவத்தில் பூக்கள் தோன்றும்போது தெளிக்கலாம். பூச்சிகளை அழிக்க செவின் தூள் அல்லது எண்டோசல்பான் மருந்து தெளிக்கலாம். ஏக்கரில் 300 கிலோ மகசூல் கிட்டும். உளுந்திற்கு நல்ல விலை கிடைக்கின்றது. நெல் பயிர் அறுவடை செய்ய இருக்கும் இடத்தில் உளுந்தினை தூவலாம். தஞ்சாவூர் விவசாயிகள் இம்முறையை அனுசரிக்கின்றனர். ஆடுதுறை 2, 3, 4 போன்ற ரகங்களை நெல் தரிசில் சாகுபடி செய்யலாம். விதை விதைக்கும்போது மண் மெழுகு பதத்தில் இருக்க வேண்டும். உளுந்து சாகுபடி நஞ்சை நிலத்தின் வளத்தை கூட்டுகின்றது.
சணப்பு சாகுபடி லாபம் தரும்:
சணப்பு சாகுபடியில் கிடைக்கும் மகசூலான விதைகளை விற்று லாபம் பெறலாம். விதைகளை விதைத்து சணப்பு செடிகளை பூமியில் மடக்கி உழும்போது ஏக்கரில் 10,000 கிலோ தழை கிடைக்கும். ஏக்கரில் 37 கிலோ தழைச்சத்து கிடைக்கும். வாழை சாகுபடி செய்யும் நிலத்தில் சணப்பு செடிகளை உழுதுவிட்டால் வாழையை தாக்கும் நூற்புழுக்கள் அழிந்துவிடும். மணிலா சாகுபடியில் சணப்பு உதவுகின்றது. பூமியில் சணப்பினை விதைத்த பின் வளர்ந்து வரும் சணப்பு செடிகளை பூமியில் உழுதுவிட்டால் மணிலா பயிரை பூச்சிகள் தாக்காது.
மேலும் கிடைக்கும் மணிலா மகசூல் நல்ல தரம் கொண்டதாக இருக்கும். சணப்பினை விதை விதைத்து 80-85 நாட்களில் அறுவடை செய்யலாம். விதைகள் பிடிக்கும் இடம் செடியின் மேல் பாகத்தில் இருப்பதால் அந்தப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து விதையை பிரித்து எடுத்துவிடலாம். இதனை பதப்படுத்தி விற்பனை செய்யலாம்.
மீதமுள்ள செடிகளை பூமியில் உழுது பூமியின் வளத்தை கூடுதலாக்கிவிடலாம். ஏக்கரில் 1,600 கிலோ மகசூல் கிட்டும். சணப்பு சாகுபடியில் நல்ல லாபம் கிட்டும். தற்போது மதுரை பகுதியில் நிலவும் சூழ்நிலை விவசாயிகளுக்கு தங்கள் திறமையை எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பாகும். விவசாயிகளுக்கு கீழ்க்கண்ட அம்சங்கள் உதவும். (1) கடுமையான உழைப்பு (2) விஞ்ஞான தொழில்நுட்பங்களை அனுசரித்தல் (3) செயல் ஆற்றல் திறன் அல்லது நிர்வாகத்திறன்.