Saturday, October 13, 2012

தென்னை பிரச்சினைகளும் தீர்வுகளும்


ஒல்லிக்காய்கள்:
தென்னையில் 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஒல்லிக்காய்கள் ஏற்படுகின்றன. மானாவாரி தோப்புகளிலும் சரியாக பராமரிக்கப்படாத தோப்புகளிலும் ஒல்லிக்காய்கள் அதிகமாக தோன்றுகின்றன.
காரணங்கள்:
  • பாரம்பரிய குணம்,
  • ஊட்டச்சத்து பற்றாக்குறை,
  • குறைவான மகரந்த சேர்க்கை.
நிவர்த்தி முறை:
  • தரமான கன்றுகளை நடவு செய்தல்;
  • பரிந்துரை செய்யப்பட்ட உர அளவிற்கு மேலாக மரத்திற்கு கூடுதலாக ஒரு கிலோ பொட்டாஷ் மற்றும் 200 கிராம் போராக்ஸ் உரங்களை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இடுதல்;
  • தேனீக்களை வளர்த்தல்;
  • 200 மில்லி தென்னை டானிக் ஆண்டுக்கு இரு முறை கொடுத்தல்
நுனி சிறுத்தல்:
மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மரத்தில் நுனிப்பகுதி பென்சில் முனை போன்று காணப்படும். காய்களின் உற்பத்தி குறைந்து சிறுத்துக் காணப்படும். இலைகளின் இணுக்களில் பச்சையம் குறைந்து காணப்படும். மட்டைகளின் நிறம் மற்றும் அகலம் குறைந்து சிறுத்துக் காணப்படும். பாளைகளின் உற்பத்தி குறைந்தும் சிறுத்தும் தோன்றும். இறுதியில் மரம் பட்டுவிடும்.
காரணங்கள்:
  • சரியாக பராமரிக்கப்படாத தோப்புகள்,
  • தகுந்த சூழ்நிலை அமையாதல்,
  • வயதான மரங்கள்.
தீர்வுகள்:
  • மரங்களை வெட்டி அகற்றிவிட்டு தரமான புதிய கன்றுகளை நடவு செய்தல்,
  • கோடையில் தண்ணீர் பாய்ச்சுவது,
  • பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை இடுவது,
  • அரை கிலோ நுண்ணூட்டக் கலவை அல்லது 200 மில்லி தென்னை டானிக் இருமுறை இடவேண்டும்.
குரும்பை உதிர்தல்:
தென்னையில் குரும்பை உதிர்தல் ஒரு முக்கியமான பயிர் வினையியல் இடர்பாடாகும். பாளை வெடிக்கத் துவங்கியது முதல் 3-4 மாதங்கள் வரை குரும்பைகள் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கும்.
காரணங்கள்:
  • பாரம்பரிய குணம்,
  • மண்ணின் அதிக உவர் மற்றும் களர் தன்மை,
  • வறட்சி,
  • நீர் தேங்குதல்,
  • மண்ணில் சத்துப் பற்றாக்குறை,
  • குறைந்த மகரந்தச் சேர்க்கை,
  • குறைவான பயிர் வளர்ச்சி ஊக்கிகள்,
  • பூச்சி மற்றும் நோய்கள்.
நிவர்த்தி முறைகள்:
  • தோப்புகளில் ஒன்று அல்லது இரண்டு மரங்களில் பாரம்பரிய குணத்தால் குரும்பை முழுவதும் கொட்டிவிடும்.
  • காய்கள் பிடிக்காது.
  • இவ்வகை மரங்களை அகற்றிவிட்டு தரமான கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை (பிஎச்) குறைவாகும் அல்லது அதிமாகும் போது குரும்பைகள் உதிரும். எனவே மண் ஆய்வு செய்து அமிலத்தன்மை கொண்ட மண்களுக்கு சுண்ணாம்பும் காரத்தன்மைக்கு ஜிப்சம் இட்டும் சரிசெய்யலாம்.
  • தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீர் பாய்ச்ச வேண்டும். பொதுவாக 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சுதல் அவசியம்.
  • நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையினால் குரும்பைகள் உதிரும்.
  • தென்னைக்கு பரிந்துரை செய்யப்பட்ட கலவை மரம் ஒன்றிற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரை கிலோ இடலாம். அல்லது தென்னை டானிக் 200 மில்லியை வேர் மூலம் செலுத்தலாம்.
இலை விரியாமை:
தென்னை இலைகள் சிறுத்து விரிவடையாமல் காணப்படும். இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கு ஒன்றுபின்னிக்கொண்டு இலைகள் வெளிவர இயலாத நிலையில் இருக்கும். சில சமயங்களில் குரும்பைகளும் உதிர்ந்துவிழும்.
காரணங்கள்:
  • போரான் சத்து பற்றாக்குறை.
நிவர்த்தி முறைகள்:
  • மரம் ஒன்றிற்கு 50 கிராம் போராக்ஸ் உரத்தை அரை கிலோ மணலுடன் கலந்து இரண்டு முறை தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் இட்டு மண் அணைக்க வேண்டும்.