Monday, November 12, 2012

பருத்தியில் கூடுதல் மகசூல் பெற யோசனை

புரட்டாசி பட்ட பருத்தியில் கூடுதல் மகசூல் பெற, இலை வழி நுண்ணூட்டச் சத்து உரம் தெளிக்க வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எலச்சிபாளையம் வேளாண் உதவி இயக்குநர் முரளிதரன் கூறியது:

எலச்சிபாளையம் வட்டாரத்தில் புரட்டாசி பட்ட பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தியில் கூடுதல் மகசூல் பெற பூக்கும் தருணத்தில் பருத்தி பிளஸ் என்ற நுண்ணூட்டச் சத்து உரக் கலவையை தெளிக்க வேண்டும். பருத்தியில் பூ மற்றும் சப்பைகள் உதிர்ந்து மகசூல் குறைபாடு ஏற்படுகிறது. காய் முழுமையாக வெடிக்காமல் பஞ்சு மகசூல் குறைகிறது. இதை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பருத்தி பிளஸ் என்ற நுண்சத்து வளர்ச்சி ஊக்கியைத் தயாரித்துள்ளது

பருத்திப் பயிர் பூக்கும் நிலையிலும் சப்பைகள் உருவாகும் தருணத்திலும், இரண்டு முறை பருத்தி பிளஸ் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ பருத்தி பிளஸ்யை கைத்தெளிப்பான் கொண்டு 20 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து அடிக்க வேண்டும். பருத்தி பிளஸ் இலை வழி தெளிப்பான் மூலம் பூக்கள், சப்பைகள், காய்கள் உதிர்வது தடுக்கப்படுகிறது. காய்வெடிப்பு அதிகரிக்கிறது. பருத்தி மகசூல் 18 சதம் உயருகிறது. 

தற்போது பருத்தி பிளஸ் வளர்ச்சி ஊக்கி எலச்சிபாளையம் வேளாண் விரிவாக்க மையம் மூலம் 25 சத மானிய விலையில் பருத்தி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. பருத்தி பிளஸ் தேவைப்படும் விவசாயிகள் எலச்சிபாளையம் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.