தத்தெடுக்கும் கிராமங்களுக்கு மட்டுமே மரக்கன்றுகள் வழங்கும் வனத்துறை, மற்ற விவசாயிகளுக்கு வழங்க மறுக்கிறது. மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி, வனத்துறை மூலம் மரங்களை வளர்க்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே அதிக மழை பெற, தரிசு நிலங்களில் மரங்களை வளர்க்க அரசு மானியம் வழங்கி, விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது. இந்நிலையில் வனத்துறையினர் கிராமங்களைத் தத்தெடுத்து, ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு, மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியில் சில கிராமங்களை தத்தெடுத்து, அங்கு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. காரியாபட்டி அரசகுளம், மாங்குளம், குரண்டி, முஷ்டக்குறிச்சி பகுதி விவசாயிகள் மரக்கன்றுகள் கேட்டு, வனத்துறையினரை அணுகிய போது, தத்தெடுப்பு கிராமங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுபற்றி விவசாயிகள் சங்கத் தலைவர் ஆனந்தன் கூறியதாவது: விவசாயம் பாதிக்கப்பட்டு, நிலங்கள் காடுகளாக மாறி விடக்கூடாது என்பதற்காக, சவுக்கு மற்றும் தேக்கு மரக்கன்றுகளை அரசு வழங்குகிறது.
ஆனால் வனத்துறை அதிகாரிகளோ, தத்தெடுக்கும் கிராமங்களுக்கு மட்டும் தான் வழங்குவோம் என்கின்றனர். இதை கைவிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.