சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள், சாகுபடி இல்லாத இந்த நிலையில் தங்களது வயல்களில் மண் ஆய்வு செய்திட வேண்டும் என வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உதவி இயக்குநர் க.ஜெயசெல்வின் இன்பராஜ் மற்றும் வேளாண்மை துணை அலுவலர்கள் பா.விஜயலட்சுமி,ஆ.ரவிச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மண் ஆய்வின் அவசியம்: செயற்கை உரங்களின் விலை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களது வயல்களில் ஏற்கெனவே உள்ள உரங்களின் அளவு மற்றும் தேவையை அறிந்து அதன்படி உரமிடுவதால், சரியான அளவிலான உரத்தை இடுவதன் மூலம் தேவையில்லாத உரச்செலவைத் தவிர்த்திடலாம். எனவே மண்மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி பரிசோதனை முடிவுகளின்படி உரமிட்டு பயன்பெறலாம்.
மேலும் பண்ணை பயிர் மேலாண்மை முறைகளின்படி, இந்த முடிவுகளைப் பூர்த்தி செய்து விவசாயிகள் ஒருங்கிணைந்த கையேடுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த கையேடுகளை கொண்டு விவசாயத் துறையின் மானிய திட்டங்களை பெறும் வகையில் ஏற்படுகள் செய்யப்படவுள்ளது. எனவே இந்த விவசாயிகள் ஒருங்கிணைந்த கையேடுகள் பெறுவதற்கு மண் ஆய்வு செய்வது அவசியம். எனவே விவசாயிகள் மண் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
மண்மாதிரி எடுக்கும் முறைகள்: நிலத்தினுடைய வரப்பு ஒரங்கள்,மரநிழல்கள் விழும் பகுதிகள்,தொழு உரங்கள்,குப்பைகள் இருக்கும் இடங்கள் மற்றும் இதன் அருகாமை இடங்கள் பயிர் சாகுபடி உள்ள இடங்கள் ஆகிய பகுதிகளில் மண் மாதிரிகள் ஆய்வு செய்வதற்காக எடுக்கக் கூடாது.
இந்த பகுதிகளைத் தவிர்த்து நிலத்தின் உள்பகுதிகளில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 5 அல்லது 6 இடங்களில் ஓரளவு தூரம் விட்டு மாற்றி மாற்றி எடுக்க வேண்டும். மாதிரி எடுப்பதற்கு முன் மண்ணின் மேற்பகுதியைச் செதுக்கி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
பின்னர் மண்வெட்டி கொண்டு முக்கால் அடி ஆழத்திற்கு ஆங்கில எழுத்து வி - வடிவத்தில் தோண்டி,தோண்டிய மண்ணை அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் வி- வடிவ பள்ளத்தின் இருபுறங்களிலும் மேலிருந்து கீழாக மண்ணை அரை அங்குல ஆழத்துக்கு சுரண்டி எடுக்க வேண்டும். இவ்வாறு பல இடங்களில் எடுத்த மண்ணை ஒரு பிளாஸ்டிக் வாளி அல்லது பிளாஸ்டிக் பைகளிலோ சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மண்ணை நிழலான பகுதிக்கு கொண்டு சென்று நன்கு ஈரமில்லாமல் உலர்த்த வேண்டும். உலர்த்திய மண்ணை ஒரு தார்பாயிலோ,அல்லது சிமென்ட் தரையிலோ கொட்டி சமப்படுத்தி வைக்க வேண்டும். பின்னர் நான்கு பாகங்களாக பிரிக்கும் வகையில் குறுக்காகவும், நெடுக்காகவும் கைவிரலால் கோடு வரைந்து இதில் எதிர்எதிராக உள்ள இரண்டு பாக மண்ணை தவிர்த்திட வேண்டும்.
மீதமுள்ள மண் அரை கிலோ வரும்போது அதை ஒரு துணிப் பையிலோ அல்லது பாலிதீன் பைகளிலோ சேகரிக்க வேண்டும். இப்போது மண் மாதிரி தயாராகிவிட்டது.
பின்னர் ஒரு தகவல் சீட்டு தயார் செய்து அதை அந்தப் பையினுள் வைத்திட வேண்டும். தகவல் சீட்டில், விவசாயியின் பெயர்,தந்தை பெயர்,சர்வே எண், சாகுபடியாகும் பரப்பு, முந்தைய பயிர், அடுத்த பயிர் மற்றும் ஏதேனும் நிலம் பற்றிய அடையாளம் இருந்தால் அதனையும் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு சேகரம் செய்த மண்மாதிரிகளை ஆய்வுசெய்ய சாதாரண பேரூட்டச் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்து ஆய்விற்கு ரூ.20 செலுத்தி அருகில் உள்ள வேளாண்மை விரவாக்க மையங்களில் இருக்கும் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அவர்கள் மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றனர் அவர்கள்.