பருத்தியில் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் கு. இளஞ்செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் பாப்பாக்குடி வட்டார பகுதிகளான இடைகால், குத்தப்பஞ்சான் கிராமத்தில் மற்றும் ஆலங்குளம் வட்டார பகுதிகளில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகளால் அதிக அளவு பூச்சி மருந்து தெளிக்கப்படும் பயிர்களில் பருத்தியும் ஒன்றாகும்.
பூச்சிகளின் மீது காணப்படும் வெண்மையான மெழுகு பூச்சு, குறுகிய காலத்தில் அதிக இனப்பெருக்கம் செய்யும் திறன், மாறிவரும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு அதிக நாள்கள் உயிர் வாழும் தன்மை, அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லி மருத்து உபயோகித்தல், இரண்டிற்கு அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகளின் கலவைகளைப் பயன்படுத்துதல், பூச்சிகளின் மறு உற்பத்தித் திறனை அதிகப்படுத்தக்கூடிய செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை பயன்படுத்துதல் போன்றவையே இப்பூச்சியானது அதிக அளவில் பரவுவதற்கான காரணங்களாகும்.
இப் பூச்சிகள் பருத்தியைத் தவிர செம்பருத்தி, சூரியகாந்தி, கத்தரி, தக்காளி, வெண்டை, பார்த்தீனியம், துத்தி, சாரணை, குரோட்டன்ஸ் போன்ற செடிகளையும் தாக்குகிறது. இவை ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு காற்று,எறும்புகள்,களைகள் மற்றும் மனிதர்கள் மூலம் பரவுகின்றன. இப் பூச்சியானது தொடர்ச்சியான வறண்ட சூழ்நிலையில் அதிகளவு இனப் பெருக்கம் செய்து பரவும் தன்மை கொண்டது.
வாழ்க்கை பருவம்: இவை ஆண் பூச்சியுடன் சேராமலேயே முட்டையிடும் திறன் பெற்றது. ஒரு பெண் பூச்சியானது ஒரு தடவைக்கு சுமார் 200 முதல் 300 முட்டைகளை இடும் தன்மை கொண்டது. தன்னுடைய வாழ்நாளான 30 முதல் 60 நாள்களில் சுமார் 400 முதல் 500 முட்டைகளை இடும்.
முட்டையில் இருந்து ஒன்றிரண்டு நாள்களில் வெளிவரும் தவழ்வான்களின் பருவமானது 10 முதல் 15 நாள்களாகும்.
வளர்ந்த பூச்சியின் உடலானது நீள் வட்டமாகவும், பக்கவாட்டில் வட்ட வடிவமாகவும் காணப்படும். இப் பூச்சியானது பொதுவாக கரும் பச்சை அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.
ஆனால், உடல் முழுவதும் பஞ்சு போன்ற வெண்மையான மெழுகால் மூடப்பட்டிருக்கும். இதன் மேற்புற நடு வயிற்றுப் பகுதியில் கருமை நிற பகுதி தென்படும்.
மேலாண்மை முறைகள்: வரப்புகளில் உள்ள களைகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். தாக்குதல் தென்பட்ட உடனே தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச் செடிகளை பிடுங்கிஅழிக்க வேண்டும். பூச்சி மற்றும் எறும்புகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து உடனடியாக தேவையான மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு கிராமத்திற்கு என்சிர்டிடு ஒட்டுண்ணியான ஏசேரோபேகஸ் பப்பாயே 100 என்ற அளவில் விட வேண்டும். ஒட்டுண்ணிகள் மற்றும் இரைவிழுங்கிகள் அதிகமாக இருக்கும் போது பூச்சி மருந்து தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சேதம் அதிகமாக இருக்கும்போது ஒரு ஏக்கருக்கு இமிடாகுளோபிரிட் 18.5 எஸ்சி 120 மிலி அல்லது தயமீதாக்கம் 20 டபிள்யூடிஜி 120 கிராம் அல்லது அசிபேட் 75 எஸ்பி 400 கிராம் அல்லது புரோபனோபாஸ் 50 இதி 400 மிலி அல்லது குளோர்பைரிபாஸ் 20 இசி 100 மிலி என்ற அளவில் ஒட்டும் திரவம் 200 மிலி கலந்து கைத்தெளிப்பான் கொண்டு செடி முழுவதும் நன்கு நனையும் படியும், பூச்சியின் மீது படும் படியும் தெளிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் மீண்டும் ஒரு முறை 15 நாள்கள் கழித்து பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.
ஒரே மருந்தை திரும்ப திரும்ப அடிக் காமல் மருந்துகளை சுழற்சி முறையில் அடிக்க வேண்டும். பூச்சி மருந்தை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கவும் என்றார் அவர்.
சேத அறிகுறிகள்
இளம் மற்றும் வளர்ச்சியடைந்த பூச்சிகள் இலையின் அடிப் பகுதி, தண்டு மற்றும் காய்ப் பகுதிகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் இலைகள் சுருண்டும், மஞ்சள் நிறமாக மாறியும் பின்னர் உதிர்ந்து விடுகின்றன.
இவை பஞ்சு போன்று வெண்மையாக திட்டு திட்டாக செடிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும். இவற்றை கைகளால் நசுக்கினால் சென்னீர் வடியும்.
மாவுப் பூச்சியானது தேன் போன்ற கழிவுப் பொருளை வெளியேற்றுவதால் அவற்றை உண்பதற்கு எறும்புகள் அதிகளவில் வருகின்றன. இந்தக் கழிவுப் பொருள்கள் இலைகள் மற்றும் காய்களில் படிவதால் கரும்பூஞ்சானம் படர்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் பாதிக்கப்படுகிறது.
மாவுப் பூச்சியின் தாக்குதல் அதிகமாகும் போது செடி முழுவதும் காய்ந்து பின்னர் இறந்து விடுகின்றன. இதனால் மகசூல் இழப்பானதுஅதிகமாக இருக்கும்.
